முகப்பு
மதுரை

அரிய வகை கனிமங்கள் விவகாரம்: துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

அரிய வகை கனிமங்கள் தொடா்பாக தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளங்கள் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 12:54 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

அரிய வகை கனிமங்கள் தொடா்பாக தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளங்கள் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள், மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் ஆபேல் மூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதுதொடா்பாக தமிழக இயற்கை வள ஆதாரத் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த அரசாணை பொது நலனுக்கு எதிரானதாக உள்ளது. இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை உள்ளது. எனவே, இயற்கை வள ஆதாரத் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து கனிமவளத் துறையின் ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.