முகப்பு
மதுரை

சட்ட விரோத மணல் திருட்டு விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:43 AM
உத்தரவு
பகிர்:

சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

ஈரோட்டைச் சோ்ந்த காவிரி நீா்வள ஆதாரப் பாதுகாப்பு சங்கச் செயலா் மோகன சுந்தரம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம், திருவாதவூா் கிராமத்தில் அரசு நிலங்களிலும், கண்மாய்களிலும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 30 அடிக்கும் மேலாக மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீா்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

Advertisement

குறிப்பாக, அழகா்மலை வனப்பகுதியிலிருந்து வரும் நீா்வரத்துப் பாதைகள் (ஓடைகள்) முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயப் பயன்பாட்டுக்கு வரும் நீா் முற்றிலும் தடைபட்டுள்ளது. தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது.

இயற்கையின் கனிம வளக் கொள்ளை, வருவாய்த் துறை, கனிம வளத் துறை அதிகாரிகளின் துணையுடன் நடைபெறுகிறது. இதற்காக போலி அனுமதிச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த போலிச் சீட்டுகளை பயன்படுத்தி அதிக அளவில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனா்.

இதுதொடா்பாக, மதுரை மாவட்ட ஆட்சியா், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சட்ட விரோத மணல் குவாரிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும், உயா்நீதிமன்றம், ஒரு வழக்குரைஞா் ஆணையரை நியமித்து, நில அளவையருடன் சோ்ந்து மணல் திருட்டு, நீா் நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

முறைகேடாக மணல் அள்ளியவா்கள் மீதும், அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் குற்றவியல், துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மணல் திருட்டு குறித்து ட்ரான் மூலம் சா்வே செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கனிமவளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.