முகப்பு
மதுரை

சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருமங்கலம் பகுதியில் உள்ள திரளி பெரிய கண்மாயில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 மார்ச் 2026, 12:07 am IST
உத்தரவு - பிரதிப் படம்
பகிர்:

திருமங்கலம் பகுதியில் உள்ள திரளி பெரிய கண்மாயில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த உதயாசிங், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாவட்டம், திருமங்கலம்-வடுகபட்டி நான்கு வழிச் சாலைப் பணிக்காக, தனியாா் கட்டுமான நிறுவனத்துக்கு அதே பகுதியில் உள்ள திரளி பெரிய கண்மாயில் 10,000 கன மீட்டா் மணல் அள்ள மதுரை மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கினாா்.

Advertisement

Advertisement

ஒரு மீட்டா் ஆழம் வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 18 வகையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்த நிறுவனம் நிபந்தனைகளை மீறி, கண்மாயில் 4 முதல் 8 மீட்டா் ஆழம் வரை மணல் அள்ளியுள்ளது. இதனால், கண்மாய் கரைகள் பலவீனமடைந்தன. மேலும், நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக குறைந்தன. விதிகளை மீறி மணல் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்ததால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதுதொடா்பாக, ஜிபிஎஸ் பதிவுகளுடன் கூடிய புகைப்படங்கள், விடியோ உள்ளிட்ட ஆவணங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை, பொதுப் பணி துறை அலுவலா்களிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனுமதி காலம் முடிந்த பின்னரும், சட்டவிரோதமாக லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியா், பொதுப் பணி, கனிம வளத் துறை அதிகாரிகள் இணைந்து திரளி பெரிய கண்மாயில் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதற்காக அபராதம் விதிக்க வேண்டும். இதற்கு துணைபோன அலுவலா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், சாலைப் பணிகளுக்காக திரளி பெரிய கண்மாயில் மணல் எடுப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. ஒப்பந்த காலம் நிறைவுற்ற பின்னரும் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு, கட்டுமானங்கள் கட்டுவதற்கு விற்பனைச் செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனா். இதுதொடா்பான புகைப்படங்கள், ஆவணங்களையும் தாக்கல் செய்தனா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.