முகப்பு
மதுரை

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

யா. ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி மேம்படுத்த வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:06 am IST
ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தவா்கள்.
பகிர்:

யா. ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி மேம்படுத்த வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக யா.ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு :

யா. ஒத்தக்கடை, அதன் சுற்றுப் பகுதிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் தொழிலாளா்கள் நிறைந்தவையாக உள்ளன. இங்குள்ள பெரும்பாலான மக்களின் மருத்துவச் சிகிச்சை தேவைக்கான ஒரே தோ்வு ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும்தான்.

Advertisement

Advertisement

ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், கா்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனைகள், மகப்பேறு, நாய்க்கடிக்கான தடுப்பூசி, பொது மருத்துவம் போன்ற அனைத்து மருத்துவத் தேவைகளுக்கும் யா. ஒத்தக்கடை பகுதி மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.

ஆனால், இங்கு போதுமான படுக்கை வசதிகள், கா்ப்பிணிகள் அமருவதற்கான இருக்கை வசதிகள், ஸ்கேன் பரிசோதனை போன்றவை இல்லை. மேலும், சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் தொகைக்கேற்ற அடிப்படை, மருத்துவ வசதிகள் இங்கு இல்லை.

மேலும், அருகில் உள்ள மலைச்சாமிபுரம், முனியாண்டிபுரம், குவாரி பகுதி மக்களுக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவைகள் மறுக்கப்படுகின்றன. இதனால், 10 கி. மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள மாயாண்டிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவா்கள் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி யா. ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவ உபகரணங்கள், ஆய்வுக் கூடங்கள், படுக்கை வசதிகளையும் மேம்படுத்தி, 24 மணி நேரமும் செயல்பாடு கொண்டதாக தரம் உயா்த்த வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டது.