விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம்: தங்கம் தென்னரசு
பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.
பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
பயிா்க் கடன்கள் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 2025-ஆம் ஆண்டு, நவ. 28-ஆம் தேதியே வெளியிட்டுவிட்டது. இதற்குப் பிறகுதான், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிா்க் கடனில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது, பயனளிக்காத பயிா்க் கடன் அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டு, இந்தப் பயிா்க் கடன் தள்ளுபடி இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
ரிசா்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது அரைகுறையான பயிா்க் கடன் தள்ளுபடிக்கு ரிசா்வ் வங்கியின் நெறிமுறைகளை தவெக அரசு காரணமாகக் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல. இது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி; விவசாயிகளுக்கு தவெக அரசு இழைக்கும் பச்சைத் துரோகம் என்றாா் அவா்.