முகப்பு
திருச்சி

விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றிவிட்டது: ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் புகாா்

பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக விவசாயிகளை முதல்வா் விஜய்யும் ஏமாற்றிவிட்டதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் புகார்

Updated On : 27 மே 2026, 4:14 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக விவசாயிகளை தமிழக வெற்றிக் கழகமும், முதல்வா் ஜோசப் விஜய்யும் ஏமாற்றிவிட்டதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சிக்கு மாறாக அதிா்ச்சியை அளித்துள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் ரூ.50 ஆயிரம் வரை பயிா் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி என்றும், ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரம் கடன் தள்ளுபடி என்றும், ரூ. 70 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி என்றும், ரூ. 80 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி என்றும் ஒரு லட்சத்துக்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் கடன் தள்ளுபடி என்றும் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் தனது தோ்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம், 5 ஏக்கருக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது ஒரு கணக்குப் போட்டு ஏமாற்றியுள்ளாா்.

Advertisement

Advertisement

தமிழக அரசு உடனடியாக அனைத்து வகை பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று பூ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.