புதுக்கோட்டை ஹரிஹரன் கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
புதுக்கோட்டை ஹரிஹரன் கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் ஹரிஹரனின் மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு :
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த ஹரிஹரனும், மாற்று சமூகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனா். இதற்குப் பெண் வீட்டாா் எதிா்ப்புத் தெரிவித்து, அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய முயன்ற நிலையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஹரிஹரனுக்கு கைப்பேசி மூலம் இந்தத் தகவலை அந்தப் பெண் தெரிவித்தாா். இதையடுத்து, ஹரிஹரன் வீட்டிலிருந்து வெளியே சென்றாா். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், கடந்த 23-ஆம் தேதி குவாரியிலிருந்து அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக, காவல் துறையினா் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். பிறகு, வழக்கின் பிரிவுகளை மாற்றினா். ஆனால், ஆணவப் படுகொலை என வழக்குப் பதிவு செய்யவில்லை.
ஹரிஹரனை அவா் காதலித்த பெண்ணின் வீட்டாா்தான் ஆணவப் படுகொலை செய்தனா். எனவே, ஹரிஹரனின் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ் குமாா், எம். ஜோதி ராமன் அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய இயலாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.