10-ஆம் வகுப்பு தேர்வில் 25-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய புதுக்கோட்டை!
வரலாற்றில் முதல் முறையாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளதைப் பற்றி...
வரலாற்றில் முதல் முறையாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 335 பள்ளிகளில் இருந்து 11,215 மாணவர்கள் மற்றும் 11,122 மாணவிகள் என மொத்தம் 22,337 பேர் தேர்வெழுதியிருந்தனர். இவர்களில் தேர்ச்சி முடிவுகளின்படி, 10,826 மாணவர்கள், 10,968 மாணவிகள் என 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.57 சதவிகிதம்.
கடந்த ஆண்டுகளில்... கடந்த 2024-25ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 25வது இடத்தில் இருந்தது. அதற்கு முன்பாக 2023-24ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தின் 23-வது இடத்தில் இருந்தது.
Advertisement
Advertisement
கடந்தாண்டில் மாநிலத் தேர்ச்சிப் பட்டியலில் 25ஆவது இடத்தில் இருந்த புதுக்கோட்டை, முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில்... அரசுப் பள்ளிகளின் அடிப்படையில், மாநிலத்தின் இரண்டாமிடத்தை புதுக்கோட்டை பெற்றிருக்கிறது. மாவட்டத்திலுள்ள 221 பள்ளிகளில், 7,117 மாணவர்கள், 8,047 மாணவிகள் என மொத்தம் 15,164 பேர் தேர்வெழுதினர்.
தேர்ச்சி முடிவுகளின்படி, 14,723 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.09 சதவிகிதம். இவர்களில் 6,819 பேர் மாணவர்கள் மற்றும் 7,904 பேர் மாணவிகள்.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி அடிப்படையில் 97.42 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற, சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 97.09 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
சென்டம் தேர்ச்சியிலும் நல்ல முன்னேற்றம்: கடந்த 2023-24ஆம் கல்வியாண்டில் (அரசு, அரசு உதவி, மெட்ரிக் சேர்த்து) மொத்தம் 90 பள்ளிகளும், 35 அரசுப் பள்ளிகளும் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றன. 2024-25ஆம் கல்வியாண்டில் மொத்தம் 111 பள்ளிகளும், 43 அரசுப் பள்ளிகளும் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றன.
2025-26ஆம் கல்வியாண்டில் மொத்தம் 221 பள்ளிகளும், 94 அரசுப் பள்ளிகளும் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்று நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அனைவரின் ஒத்துழைப்பு... தொடர்ந்து ஊக்குவித்து வந்த மாவட்ட ஆட்சியர் தொடங்கி, பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கிய ஆசிரியர்கள் வரை அனைவரின் ஒத்துழைப்புதான் இந்த வரலாற்றுச் சாதனைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாற்றுச் சாதனையை புதுக்கோட்டை அடைந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மு. அருணா தொடக்கத்திலேயே அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கடுமையாக உழைத்தனர். மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. அனைவருக்கும் மாவட்டப் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நன்றி” என்றார் சண்முகம்.
வரலாற்றில் முதல் முறையாக மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், தொடர்ந்து இந்த முன்னணியைத் தக்க வைக்க வேண்டும் என மாவட்டத்திலுள்ள கல்வியாளர்கள் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.