புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்!
முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவை மனுதாரரே திரும்பப் பெறப்பட்டது பற்றி...
வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக வழக்குப்பதியக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரரே திரும்பப் பெற்றுக் கொண்டார்.
கடந்த 2015-2016-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நடிகா் விஜய் தாக்கல் செய்தபோது, திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்றதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறையினா், நடிகா் விஜய் வீட்டில் 2015-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்துக்காக அவா் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளாா் என கண்டறியப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், விஜய் தனது வருமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்ததற்காக அவருக்கு ரூ.1.50 கோடி அபராதமும் வருமான வரித்துறை தரப்பில் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு உறுதி செய்தது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வில் விஜய் தாக்கல் செய்திருக்கும் நிலையில், வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக வழக்குப்பதியக் கோரி கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததை அடுத்து, நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.