இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரின் சார்பில் கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தி கீழக்கரையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு குழுவின் மாவட்டத் தலைவர் பரமக்குடி செல்வராஜ் தலைமை வகித்தார். பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளீதரன், சேவாபாரதி அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் விவேகானந்தன்,கீழக்கரை நகர் பாஜக பொதுச் செயலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்தை ஈர்க்கவும்,
கீழக்கரையில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் கருப்பட்டி முனியசாமி கோயில் ஆகியவற்றுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் தனியார் ஒருவருக்கு பட்டா வழங்கி இருப்பதைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இந்து சமய ஆர்வலர் நெல்லை மணிகண்டன், கீழக்கரை பாஜக நகர் தலைவர் விஜய துரைப்பாண்டியன், அகில பாரதீய மீனவர் பேரவையின் மாநில
இணை அமைப்பாளர் தவசிமுனி, எஸ்.சி. அணியின் மாவட்ட தலைவர் வாசசேகர் உள்பட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.