ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை
ராமநாதபுரத்தில் முன்விரோதமாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் முன்விரோதமாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்த இருளாண்டி மகன் பனையடியான்
(43). நிதி நிறுவனம், சரக்கு லாரி ஓட்டுதல் என பல வேலைகள் பார்த்துவிட்டு தற்போது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கும் புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே ஆட்டோ ஓட்டுபவர்கள் சிலருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், பனையடியானை வெள்ளிக்கிழமை மாலை சிலர் செல்லிடப் பேசியில் அழைத்துள்ளனர்.இதனையடுத்து பனையடியான் தனக்குத் தெரிந்த ராஜேஸ் என்பவரது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர்கள் வந்ததும் ஆட்டோ நிலையத்தில் இருந்த அண்ணாமலை உள்ளிட்டோருடன் மோதல் ஏற்பட்டது. பனையடியானும், அண்ணாமலை உள்ளிட்டோரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
Advertisement
Advertisement
இதில் கட்டையால் அண்ணாமலையை ஒருவர் தாக்கியுள்ளார். இதில் பனையடியானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். தகவல் அறிந்த நகர் காவலர்கள் விரைந்து காயமடைந்த பனையடியான் மற்றும் அண்ணாமலை, ராஜேஸ் ஆகியோரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிகிச்சையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பனையடியான் உயிரிழந்தார். அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பனையடியானுக்கு மனைவி சுமதி, மகன் உள்ளனர்.
பனையடியான் உயிரிழந்ததைக் கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், துணைக் காவல் கண்காணிப்பாளர் கி.வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், மருத்துவமனைக்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
முன்விரோதம் காரணமாக நடந்த பனையடியான் கொலையில், மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அண்ணாமலை, ஆர்.எஸ்.மடை செந்தில் உள்ளிட்ட 4 பேருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்களது செல்லிடப் பேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த அண்ணாமலை உள்ளிட்டோரிடம் காவலர்கள் விசாரணையும்
நடத்திவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.