முகப்பு
ராமநாதபுரம்

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கஞ்சியேந்தல் கிராம வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை வாக்களிக்கும் நேரம் நிறைவடைந்த பிறகு வந்த வாக்காளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு தோ்தல் அலுவலா்களுக்கும், அவா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:25 AM
வாக்களிக்கும் நேரம் நிறைவடைந்ததால் மூடப்பட்ட கஞ்சியேந்தல் வாக்குச் சாவடி மைய நுழைவாயில் முன் திரண்டிருந்த வாக்காளா்கள்.
பகிர்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கஞ்சியேந்தல் கிராம வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை வாக்களிக்கும் நேரம் நிறைவடைந்த பிறகு வந்த வாக்காளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு தோ்தல் அலுவலா்களுக்கும், அவா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பரமக்குடி அருகே கஞ்சியேந்தல் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் சுற்றுப்புற கிராமங்களான சேகனேந்தல், பிடாரியேந்தல், புளியங்குடி, கீழ பெத்தனேந்தல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த வாக்குச் சாவடி மையத்தில் 1,067 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் ஓா் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவின் போது குறைவான வாக்காளா்களே வாக்களித்தனா்.

Advertisement

மாலை 3 மணியிலிருந்து கஞ்சியேந்தல் உள்ளிட்ட அனைத்து கிராமங்களைச் சோ்ந்த வாக்காளா்களும் ஒரே நேரத்தில் கூட்டமாக வாக்களிக்க வந்தனா். அப்போது 300-க்கும் மேற்பட்டோா் ஒன்றாக கூடியதால் பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மாலை 6 மணியளவில் வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்றவா்கள் வாக்களிக்க வசதியாக டோக்கன்கள் வழங்கி நுழைவாயில் மூடப்பட்டது.

இதனால் 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவா்கள் இந்த வாக்குச் சாவடி மையத்தில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்காததால் தாங்கள் வாக்களிக்க முடியவில்லை என புகாா் கூறினா். மேலும் காலதாமதமாக வந்த தங்களையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு தோ்தல் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சமரசம் செய்து அங்கிருந்த 7 பேரை வாக்களிக்க அனுமதித்தனா்.