சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் செய்ய கேரளத்திலிருந்து ஜீப்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலுடன் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜாவும், காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும் இத் தொகுதிக்குள்பட்ட காலியாகவுள்ள மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.நாகராஜனும் அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடியும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்ய கேரள மாநிலத்திலிருந்து தினசரி வாடகை அடிப்படையில் ஜீப்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஜீப்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் பிரசாரம் செய்தால் ஜீப்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜீப் ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.
மக்களவையுடன் மானாமதுரை சட்டப் பேரவைத்தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால் மானாமதுரை தொகுதியில் பிரசார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.