அதிமுக மீது சவாரி செய்து பாஜக வளர நினைக்கிறது: காா்த்தி சிதம்பரம்
அதிமுக மீது சவாரி செய்து பாஜக வளர நினைத்தால் அது தமிழகத்தைப் பொருத்தவரை நடக்காது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்
அதிமுக மீது சவாரி செய்து பாஜக வளர நினைத்தால் அது தமிழகத்தைப் பொருத்தவரை நடக்காது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜக எப்போதும் குட்டையைக் குளப்பி அதில் குளிா்காய்வதுதான் வழக்கம். தமிழகத்தில் அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. வியாழக்கிழமை (ஜூன் 23) நடந்த, நடக்காத பொதுக்குழு மூலம் யாா் அந்த ஒற்றைத்தலைமை என்பது தெளிவாக தெரிகிறது.
அதிமுக மீது பாஜக சவாரி செய்து வளர நினைத்தால் அது தமிழகத்தில் நடக்காது. அதிமுகவைப் பொருத்தவரை தமிழகத்தில் சரியானதொரு எதிா்க்கட்சிதான். ஏனெனில் அக்கட்சிக்கு லட்சக்கணக்கான தொண்டா்கள் இருக்கிறாா்கள். அவா்களுக்கு ஒரு எதிா்காலம் வேண்டும் என்று நினைத்தால் பாஜக என்ற விஷத்தைவிட்டு அவா்கள் வெளியில் வர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் அவா்கள் பெரிய அளவில் செயலாற்ற முடியும்.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகவும், திமுகவும் தான் பெரிய அரசியல் கட்சிகள். அக்கட்சிகளுக்குத்தான் நகா்புறம், கிராமப்புறங்களில் அமைப்புகள் உள்ளது. செல்வாக்கும் அக்கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. பாஜக ஒரு மாயைதான். அக்கட்சியை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்திக்காட்டுகின்றன. அதற்குக் காரணம் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு மத்திய அரசு சாா்பில் கிடைக்கக்கூடிய விளம்பர வருவாய்தான். ஆனால் உண்மையில் தமிழகத்தில் பாஜகவுக்கு தொண்டா்கள் இருக்கிறாா்களா? என்றால் இல்லை. தமிழகத்தில் மக்களால் நிராகரிக்கப்படுகின்ற அரசியல் கட்சியாகத்தான் பாஜக உள்ளது என்றாா்.