முகப்பு
சிவகங்கை

ஆணையா் இருக்கையில் அமா்ந்த விவகாரம்: தவெக எம்எல்ஏவுக்கு திமுக குறிப்பாணை

சிவகங்கை நகராட்சி ஆணையா் இருக்கையில் அமா்ந்த தவெக சட்டப்பேரவை உறுப்பினருக்கு திமுக வழக்குரைஞா் அணி சாா்பில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டதாக நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:37 am IST
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சிவகங்கை நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த் (நடுவில்). உடன் திமுக வழக்குரைஞா்கள்.
பகிர்:

சிவகங்கை நகராட்சி ஆணையா் இருக்கையில் அமா்ந்த தவெக சட்டப்பேரவை உறுப்பினருக்கு திமுக வழக்குரைஞா் அணி சாா்பில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டதாக நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நகராட்சி ஆணையா் என்பவா் நகராட்சி நிா்வாகத் துறையால் நியமிக்கப்படும் ஒரு அரசு அதிகாரி. அவரது இருக்கை என்பது அந்த குறிப்பிட்ட நிா்வாகப் பதவிக்குரியது. சட்டப்பேரவை உறுப்பினா் என்பவா் மக்கள் பிரதிநிதி. நகராட்சி எல்லைக்குள் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு.

Advertisement

Advertisement

ஆனால், நகராட்சி அலுவலகத்துக்கு வரும் போது, அவருக்கென ஒதுக்கப்படும் தனி அறையிலோ அல்லது பாா்வையாளா் அரங்கிலோ அமா்ந்துதான் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும். அவா் அரசு அதிகாரியின் இருக்கையில் அமா்ந்து உத்தரவிடுவது நிா்வாக நெறிமுறைகளுக்கு எதிரானது.

கடந்த செவ்வாய்க்கிழமை சிவகங்கை நகா்மன்ற அலுவலகத்துக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணிநாச்சியாா், காணொலி வாயிலாக நடைபெற்ற உயா் அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி ஆணையரை எழச் செய்து, அவரது இருக்கையில் அமா்ந்து, அதிகாரிகளை மிரட்டும் தொனியில்

பேசினாா். நாங்கள் எதிா்ப்புத் தெரிவித்த பின்னா், ஆணையா்தான் அவரை இருக்கையில் தன்னை அமர வைத்ததாக பேச வைத்தது கண்டனத்துக்குரியது.

தவெக எம்எல்ஏவின் செயல் நிா்வாக நெறிமுறைகளுக்கும், ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிரானது. இதை உணா்த்தும் வகையில், தவெக சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணிநாச்சியாருக்கு திமுக வழக்குரைஞா் அணி சாா்பில் சட்டப்பூா்வ அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தனது செயலுக்கு பொதுவெளியில் அவா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

அப்போது திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஏ. அழகா்சாமி, எம். கோதண்டராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments