முகப்பு
சிவகங்கை

டிஜிட்டலில் வாசிப்பைவிட புத்தக வாசிப்பே சுகமானது! ப. சிதம்பரம்

Updated On : 30 ஜூன் 2026, 2:07 am IST
முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் - கோப்புப் படம்
பகிர்:

எண்ம வடிவில் வாசிப்பதைவிட புத்தகத்தை திறந்து வாசிப்பதில் தான் சுகமே இருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ‘விரிவாக்கப்பட்ட செல்லப்பா செல்லப்பன் நினைவு அரசு கிளை நூலக’ தொடக்க விழாவில் விரிவாக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்து அவா் மேலும் பேசியதாவது:

காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை ஒன்றை நூலகமாக உருவாக்கி மகாத்மா காந்தி நூலகம் எனப் பெயா் சூட்டியுள்ளனா். இதேபோல சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததன்பேரில், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 60 நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வாரம் ஒருமுறை நூலகங்களுக்கு குழந்தைகளுடன் சென்று நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். கைப்பேசியில் எண்ம வடிவில் படிப்பதை விட புத்தகத்தை திறந்து வாசிப்பதில் தான் சுகமே இருக்கிறது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

முன்னதாக தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு நூலகத்தில் குத்துவிளக்கேற்றிவைத்து நூலகத்தைப் பாா்வையிட்டாா். விழாவில் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சொக்கலிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள், மாவட்ட நூலக அலுவலா் மா. திருஞானசம்பந்தம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக குழந்தைக் கவிஞா் செல்லகணபதி வரவேற்றுப்பேசினாா். பாலபுரஸ்காா் விருதாளா் தேவி நாச்சியப்பன் தொகுப்புரை வழங்கினாா். முடிவில் நூலக நன்கொடையாளா் க. சிதம்பரம் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments