தேனி அருகே காவலர் போல் நடித்து கட்டப் பஞ்சாயத்து செய்தவர் கைது
தேனி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு காவலர் போல் நடித்து, கட்டப் பஞ்சாயத்து செய்தவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
தேனி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு காவலர் போல் நடித்து, கட்டப் பஞ்சாயத்து செய்தவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் மகேந்திரன் (45). இவரது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர், தன்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு காவலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் அவர், மகேந்திரனின் குடும்பப் பிரச்னை குறித்து அவரிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் நோக்கத்தில் பேசினாராம். அந்த நபரின் நடவடிக்கையில் மகேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரைப் பிடித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீஸார் அங்கு வந்து விசாரித்ததில், அந்த நபர் போ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மரக்காமலை மகன் குமார் (29) என்பது தெரிய வந்தது. மீன் பிடி தொழில் செய்து வரும் குமார், மகேந்திரனின் உறவினரான தனது நண்பருக்கு ஆதரவாக தனிப் பிரிவு காவலர் போல் நடித்து, கட்டப் பஞ்சாயத்து பேசி மகேந்திரனை மிரட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து மகேந்திரன் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தார்.