மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்து உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்து உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சின்னமனூர், உத்தமபாளையம், குச்சனூர் மற்றும் போடி ஆகிய நான்கு வழிகளில் இருந்து வரும் பேருந்துகள் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி வழியாக கடந்து செல்கிறன. இப்பகுதியில் நாள்தோறும் அதிகளவில் பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. எனவே தேனி உள்பட பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இச் சாலை உள்ளது. இந்நிலையில், சின்னமனூர் - போடி இடையே செல்லும் நெடுஞ்சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெரிய பள்ளங்களாக மாறி கற்கள் பெயர்ந்து சாலையிலேயே சிதறி கிடக்கிறன.
இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
அதேபோல, இலகு ரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பழுதாகி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சின்னமனூர் - போடி நெடுஞ்சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.