"டம்டம்' பாறையில் மங்களூரு இளைஞர் கொலை: மனைவி, கார் ஓட்டுநர் கைது
கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறையில் மங்களூரு இளைஞர் கொலை செய்யப்பட்ட
கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறையில் மங்களூரு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி மற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி இப்பகுதியில் 34 வயது மதிக்கதக்க இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கர்நாடக மாநிலம், மங்களூர் அருகே காஞ்சிபட்டாவை சேர்ந்த முகமது சமீர் (34) என தெரியவந்தது.மேலும் அவரது மனைவி பிர்தோஷ் (28) -க்கும், உறவினரும் கார் ஓட்டுநருமான முகமதுயாசிக் (35) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாம்.
இதனிடையே வெளிநாட்டில் வேலை செய்து வந்த முகமது சமீர் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் மனைவி பிர்தோஷ் மற்றும் குழந்தைகளுடன் கடந்த மாதம் கொடைக்கானல் சுற்றுலா வந்துள்ளார். காரை முகமது யாசிக் ஓட்டி வந்துள்ளார். அப்போது கொடைக்கானல் செல்லும் வழியில் பிர்தோஷூம் முகமது யாசிக்கும் இளநீரில் மயக்க மருந்து கலந்து முகமது சமீருக்கு கொடுத்துள்ளனர். அதன் பின் இருவரும் முகமது சமீரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, சடலத்தை டம்டம் பாறை பகுதியில் வீசி விட்டு தப்பினர் என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் முகமது யாசிக், பிர்தோஷ் இருவரையும் தேவதானப்பட்டி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கைது செய்தனர்.