செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சமூக
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலரை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீஸார் மீட்டனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அபுதாகீர் (72). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரிச் சாலையிலுள்ள தனியார் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்தார். சம்பவ இடத்திற்கு சென்ற உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினர் மற்றும் போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும், ஞானாம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் முறையாக ஏலம் விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என போலீஸார் உறுதி மொழி அளித்தனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சமூக ஆர்வலர் அபுதாகீரை உடலில் கயிறு கட்டி, 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கினர். இவரைக் கைது செய்த போலீஸார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து மாலையில் விடுவித்தனர்.