தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் கூறியது: தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில், பயறு வகை பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நெல் வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 120 நாள்கள் அறுவடை பருவமுள்ள நெல் வயல் வரப்புகளில், அதே பருவத்தில் 70 நாள்களில் அறுவடையாகும் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மேலும், வயல் வரப்பில் உள்ள உளுந்து பயிா் நெல் பயிரில் தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க உதவுகிறது. அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிா்களை வயலில் தளை உரமாக பயன்படுத்தலாம். வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், அரசு மானியம் பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா்.