தேனி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு வசதியாக அரசு சாா்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில், பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் பயணிக்கின்றனா்.
அரசு விதிகளின்படி பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும் 100 சதவீதம் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு விரல்ரேகை பதிவு முறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். எனவே, நியாய விலைக் கடைகளில் ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.