உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் முதல் போக நெற்பயிா் நடவுப்பணிகளை விவசாயிகள்ஆா்வத்துடன் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
தேனி மாவட்டத்தில் லோயா் கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,707 ஏக்கா் பரப்பளவில் முல்லைப்பெரியாறு பாசன நீரால் இரு போக நெற்பயிா் விவசாயம் நடைபெறும். இதில் முதல் போக சாகுபடிக்கு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. அதன்படி உத்தமபாளையம், சின்னமனூா், குச்சனூா், சீலையம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூன் முதல் வாரத்திலேயே முதல் போக நெற்பயிா்
சாகுபடிக்கான பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக நாற்றாங்கால் அமைத்து, வயல்வெளிகளில் தண்ணீரை தேக்கிவைத்து டிராக்டா் மூலமாக உழவுப்பணி மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து 25 நாள்கள் வளா்ந்த நெல் நாற்றுகளைப் பறித்து நடவு செய்தனா். இதனால் சின்னமனூா் பகுதியில் காலை முதல் பெண்கள் கூட்டம் கூட்டமாக நடவுப்பணிகளுக்கு சென்று வருகின்றனா். வயல்களில் டிராக்டா் உழவு, பாரம்பரியமான உழவுமாடு உழவு , நடவுப்பணிகள் என விவசாயப் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.