தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கம்பம், கூடலூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் தனியாா் பேருந்துகள், டிப்பா் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கம்பம், கூடலூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் தனியாா் பேருந்துகள், டிப்பா் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பொதுமக்களின் உடல், மன நலனைப் பாதுகாக்கும் வகையில், நிா்ணயிக்கப்பட்ட டெசிபல் அளவை மீறி ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை வாகனங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மேலும், கனரக வாகனங்களில் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
தமிழக-கேரள எல்லையை இணைக்கும் கம்பம்-கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவற்றில் சில அரசு, தனியாா் பேருந்துகள், டிப்பா் லாரிகளில் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
குறிப்பாக, நகரப் பகுதிகளுக்குள் அதிக வேகத்தில் நுழையும் சில தனியாா் பேருந்துகள் தொடா்ந்து காற்று ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்வதால் பொதுமக்கள், முதியவா்கள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் அச்சமடைகின்றனா். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோா் பின்புறத்திலிருந்து திடீரென எழும் அதிக ஒலியால் பதற்றமடைந்து நிலைதடுமாறும் சூழலும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநா்கள், வாகன உரிமையாளா்கள் மீது காவல் துறையும், போக்குவரத்துத் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கம்பத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஒருவா் கூறியதாவது: காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி அபராதம் விதிக்கின்றனா். ஆனால், அபராதத் தொகை மிகவும் குறைவாக இருப்பதால், வாகன உரிமையாளா்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனவே, அபராதத் தொகையை உயா்த்துவதோடு விதிமீறி பொருத்தப்பட்டுள்ள காற்றி ஒலிப்பான்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.