திமுக, காங். வெற்றி பெற்றால் தான் பட்டாசு, தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசன், செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சாத்தூர் நகரில் உள்ள காமராஜர் சிலை முன்பு தொடங்கிய இந்த பிரசார ஊர்வலம், பழைய படந்தால் சாலை, மாரியம்மன்கோயில் தெரு, முருகன் கோயில் தெரு, பிள்ளையார்கோயில் தெரு வழியாக முக்குராந்தல் வரை சென்றது.
இந்த பிரசாரத்தில் சீனிவாசனுக்கு ஆதரவாக அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், மத்தியில் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் தான் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும். மேலும் சாத்தூர் நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடபட்டுள்ளது.
சீனிவாசன் எம்.எல்.ஏ.,வாக சட்டப்பேரவைக்குச் சென்றால் தான் குடிநீர் திட்டமும் நிறைவேற்றப்படும்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தற்போது விதிக்கபட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியும் குறைக்கப்படும். மேலும் முதியோர் உதவித்தொகை உள்பட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் சீனிவாசனுக்கும்,விருதுநகர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த பிரசாரத்தின் போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.