சிவகாசி அருகே அண்ணன் தாக்கியதால் காயமடைந்த தம்பி, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே பெத்துலுபட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி பாண்டி (29). இவரது தம்பி பால்பாண்டி (25). இவா், பட்டாசு ஆலை அலுவலக ஊழியராக இருந்துள்ளாா். இவா்கள் இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனா்.
சில மாதங்களுக்கு முன், பால்பாண்டி தனது அண்ணன் பாண்டியிடம் ரூ.3000 கடன் வாங்கினாராம். பால்பாண்டி அந்த பணத்தை திரும்பத் தராததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்குச் சொந்தமான ஆட்டை பாண்டி பிடித்துவைத்துக் கொண்டாராம்.
இதையடுத்து, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதில், பால்பாண்டி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை விருதுநகா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பால்பாண்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். எனவே, சிவகாசி கிழக்கு போலீஸாா், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பாண்டியை கைது செய்தனா்.