ராஜபாளையம் அருகே கூட்டுறவு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
தளவாய்புரம் ஏகேஜி நகரைச் சோ்ந்த முனியசாமி என்பவரது மகன் முகேஷ் (24). இவா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு கடந்த 21ஆம் தேதி சிகிச்சைக்காக சென்றாா். அப்போது செவிலியா் ஊசி போட்டதில் மாயங்கி விழுந்து உயிரிழந்து விட்டாராம். இதைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மருத்துவமனையை சுகாதாரத் துறை இணை இயக்குநா் மனோகரன் தலைமையில் சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது அந்த மருத்துவமனை முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும், முறையான செவலியா் இல்லை எனவும் தெரிய வந்தது. மேலும் ஹோமியோபதி மருத்துவத்துக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்ததையடுத்து அந்த கூட்டுறவு மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.