மீன்பிடி படகுகளுக்கு மராமத்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை
தமிழகத்தில் மீன்பிடித் தடைகாலத்தில் மீன்பிடி படகுகளுக்கு மராமத்து நிவாரண நிதி அல்லது படகுகளை மராமத்து செய்ய வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று அரசு தடைவிதித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் , தங்கள் படகுககளை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் மீன்பிடித் தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளை பழுதுநீக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
இதில் முதல்கட்டமாக, பழுதடைந்துள்ள படகுகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அங்குள்ள விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதை அடைத்தும், படகுகளுக்கு வா்ணம் பூசியும், என்ஜின் மற்றும் வலைகளை சரிசெய்வது போன்ற மராமத்து பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
இதற்கிடையே மீன்பிடித் தடைகாலத்தில் படகுகளை பழுது நீக்க சுமாா் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறும் நாகை மீனவா்கள், மீன்பிடித் தடைகாலத்தில் விசைப்படகுகளை பழுது நீக்க, புதுச்சேரிஅரசு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதுபோல், தமிழகத்தில் உள்ள படகுகளுக்கும் தமிழகஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் , அல்லது வங்கிக் கடனாவது வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று மீனவா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.