மின்துறையில் நிலவும் குறைபாடுகளைப் போக்க வேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்
காரைக்கால் மின் துறையில் நிலவும் குறைபாடுகளைப் போக்க புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் மின் துறையில் நிலவும் குறைபாடுகளைப் போக்க புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி :
மின் துறை என்பது சேவையாக செயல்படும் துறையாகும். ஆனால் மக்களுக்கான சேவை என்பதில் குறைபாடு நிலவுகிறது. ஒரு வீட்டின் மின் கட்டணம் சுமார் ரூ.500 செலுத்தப்பட்டுவந்திருந்தால், அவர்கள் தற்போது ரூ,2,500, ரூ.3,000 என செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கடும் மன வேதனையில் இருக்கும்போது, பணம் செலுத்தவில்லையெனில் இணைப்பு துண்டிப்பு என்பதும், புதிய இணைப்புக்கு மீட்டர் துறையிடம் இல்லாதது, சந்தையில்கூட கிடைக்காததால் மக்கள் படும் துயரம் அதிகம். இவ்வாறான வேதனையை மக்கள் சந்திக்கும்போது, மின் கட்டண உயர்வு என்பது மக்களுக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. காரைக்காலில் 3 மின் உதவிப் பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒயர்மேன் பதவியிலிருந்து டெஸ்டர் பதவி என்பதற்கான பதவி உயர்வு காரைக்காலில் 7 பேருக்கும், புதுச்சேரியில் 40 பேருக்கும் செய்யவேண்டியுள்ளது. காரைக்கால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் புதைவழி மின் கேபிள் மக்கள் நடமாட்டப் பகுதியில், கால்நடைகள், மனிதர்கள் பாதிக்கும் வகையிலேயே திறந்தவெளியில் இருக்கிறது. இதனை சரிசெய்ய புதுச்சேரி மின் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மின்துறையில் பணியாற்றியவர் உயிரிழந்திருக்கும்போது, அவரது குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவில்லை. இவற்றையெல்லாம் மின்துறையின் உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற பிரச்னைகளைப் பட்டியலிட்டு, போர்க்கால முறையில் சரிசெய்வதற்கான நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்கவேண்டும் என்றார் நாஜிம்.