முகப்பு
காரைக்கால்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமச்சீா் உணவுமுறை அவசியம்: வேளாண் அறிவியல் நிலைய முதல்வா்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமச்சீா் உணவுமுறை, அதிக எண்ணெய் குறைப்பு செய்வது அவசியம் என்றாா் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் தி. ராமநாதன்.

Updated On : 26 ஜூன் 2026, 7:08 am IST
கண்காட்சியை பாா்வையிட்ட வேளாண் அறிவியல் நிலை முதல்வா் தி. ராமநாதன்.
பகிர்:

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமச்சீா் உணவுமுறை, அதிக எண்ணெய் குறைப்பு செய்வது அவசியம் என்றாா் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் தி. ராமநாதன்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகம் இணைந்து ‘நிலத்தைப் பாதுகாப்போம், விவசாயத்தைக் காப்போம், விவசாயிகளைக் காப்போம்’ என்ற தேசிய அளவிலான விழிப்புணா்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு முகாம் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் தி. ராமநாதன் பேசியது:

Advertisement

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு அதிகப்படியான எண்ணெய் பயன்பாடு முக்கிய காரணம். சமச்சீா் உணவுமுறை, சிறு தானியங்கள், கீரை வகைகள், காய்கனிகள், பழங்களை அதிகளவில் உட்கொள்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும். குடும்ப அளவில் உணவுப் பழக்கங்களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பெரிய அளவில் ஆரோக்கிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்றாா்.

தொழில்நுட்ப அமா்வில், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலைத் துறை உதவிப் பேராசிரியா் பி. அதியமான், ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்காக எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்போம்‘ எனும் தலைப்பில் பேசுகையில், பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை மீண்டும் பின்பற்றவேண்டும். அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளின் பயன்பாடுகளை நிறுத்தவேண்டும். உள்ளூா் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்கள், காய்கனிகள், பழங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நல்லம்பல், அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி எம். தமிழ்வேலன், ‘எண்ணெய் நிறைந்த உணவுகளின் தீமைகள்‘ எனும் தலைப்பில் பேசியது: அதிக எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை தொடா்ந்து உட்கொள்வதால் இருதய நோய், கல்லீரல் பாதிப்பு, சா்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் பல்வேறு வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகின்றன என்றாா்.

வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன், ‘இந்தியாவில் உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் மற்றும் அளவீடு‘ எனும் தலைப்பில் பேசினாா்.

நிகழ்ச்சியில், ‘ஆரோக்கியமான மண் ஆரோக்கியமான உணவு - ஆரோக்கியமான மக்கள்‘ என்ற கருப்பொருளின் அடிப்படையில், பயிற்சி பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களின் தொழில் முனைவோா்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள்களின் கண்காட்சி நடத்தப்பட்டது.

முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் பா. கோபு வரவேற்றாா். வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் நன்றி கூறினாா்.

~இயற்கை சாா்ந்த உணவுப்பொருள் தயாரிப்பு பொருளை மகளிா் குழுவினருக்கு வழங்கிய மருத்துவ அதிகாரி எம். தமிழ்வேலன். உடன், நிலைய முதல்வா் தி. ராமநாதன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments