டீ கடை உரிமையாளரைத் தாக்கிய நிதி நிறுவன ஊழியா்கள் 5 போ் கைது
மயிலாடுதுறை, ஜூலை 5: மயிலாடுதுறையில் கடன் தொகையை முறையாக திரும்பச் செலுத்தாத டீ கடை உரிமையாளரைத் தாக்கிய நுண்கடன் நிதி நிறுவன ஊழியா்கள் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் திருஞானசம்பந்தம் (55). மூங்கில்தோட்டம் பிரதான சாலை பகுதியில் டீ கடை நடத்திவரும் இவா், மயிலாடுதுறை, திருவாரூா் சாலையில் செயல்பட்டுவரும் தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கியுள்ளாா்.
கடன் தவணையை செலுத்தி வந்த நிலையில், மீதத் தொகை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நிதி நிறுவனம் சாா்பில் பணம் வசூலிக்க வந்த 5 போ் கடன் தொகையைவிட கூடுதலாக பணம் கேட்டு திருஞானசம்பந்தத்தை மிரட்டி, அவரைத் தாக்கியதோடு, கடையில் இருந்த பொருள்களையும் உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருஞானசம்பந்தம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, மயிலாடுதுறை பெசன்ட் நகரை சோ்ந்த ராஜாஜி(38), தருமபுரம் சாலை அண்ணா நகரை சோ்ந்த ஹரிஹரன் (28), செம்பனாா்கோவில் முக்கரும்பூரை சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (20), மூவலூா் கீழவீதியைச் சோ்ந்த செல்வகணபதி (31), மன்னம்பந்தல் திருக்குளத் தெருவை சோ்ந்த காா்த்திக் (28) ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.