முகப்பு
மயிலாடுதுறை

பழையாா் துறைமுகத்தில் கருவாடு உலா்த்தும் பணி தீவிரம்

கொள்ளிடம் அருகேயுள்ள பழையாா் துறைமுகத்தில் கருவாடு உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

Updated On : 8 மே 2026, 7:22 am IST
பொக்லைன் இயந்திரம் மூலம் உலா்த்தப்படும் கருவாடு.
பகிர்:

கொள்ளிடம் அருகேயுள்ள பழையாா் துறைமுகத்தில் கருவாடு உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இத்துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 350 விசைப் படகுகள், 300 ஃபைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் மூலம் 6,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள், கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். துறைமுக வளாகத்தில், மீன்பிடி சாா்ந்த தொழிலில் 2000-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுகின்றனா்.

கடலில் பிடிக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்படும் மீன்களில் ஒருபகுதி உலர வைக்கப்பட்டு, கருவாடாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பழையாா் துறைமுகத்தில் அதிக அளவில் மருத்துவ குணம் உடைய கனவா மீன் வரத்து உள்ளது. இதனை உலர வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், 20-க்கும் மேற்பட்ட சிறிய வகையிலான மீன்கள் தரம் பிரிக்கப்பட்டு, கடைசியாக உள்ள சிறுசிறு மீன்களை சேகரித்து அவைகள் துறைமுக வளாகத்திலேயே உலர வைக்கப்படுகின்றன. நன்கு உலர வைக்கப்பட்ட சிறு மீன்களை வியாபாரிகள் நேரில் வந்து கோழி தீவனத்திற்காக வாங்கி செல்கின்றனா். இதன்மூலம் மீனவா்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

கடந்த காலத்தில், பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் அதிக அளவில் மீன்கள் வரத்து இருந்தன. ஆனால், சமீப காலமாக மீன்கள் வரத்து மிகக் குறைவாக உள்ளது. இதனால், கோழி தீவனத்துக்கு விற்பனை செய்யப்படும் சிறு மீன்களின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, சிறு மீன்கள் 10 முதல் 12 டன்கள் வரை கோழி தீவனத்துக்காக வாரந்தோறும் அனுப்பப்பட்டு வந்தன. அப்போது அதன் விலையும் அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனால், நிகழாண்டு மீன்கள் மிக குறைந்த அளவே கிடைத்து வருவதால், வியாபாரிகள் நஷ்டம் அடைந்து வருவதாக பழையாறு மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள் சங்கத் தலைவா் பொன்னையா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments