புயலால் முறிந்த மரங்களை அகற்ற தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புயலால் சேதமடைந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகளுக்கு உதவ தன்னார்வ
புயலால் சேதமடைந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகளுக்கு உதவ தன்னார்வ நிறுவனங்கள் முன்வரவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அங்குள்ள பெத்துக்குட்டித் தெருவில் திருப்பூர் மத்திய அரிமா சங்கம், சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோலிய வணிகர் சங்கம் இணைந்து மேற்கொண்டு வரும் மரங்களை அகற்றும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார்.
மேலும், உதவி பெறும் பள்ளி சீரமைப்பு, மீனவர் காலனியில் படிந்துள்ள கடல் களிமண் அகற்றும் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறியது: நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன.
பாதிப்புக்குள்ளானப் பகுதிகளில் 98 சதவீதம் மின்பாதை சீரமைப்புப் பணிகள் முடிவுற்று, வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாய மின் இணைப்புகள் மற்றும் உப்பளங்களுக்கான மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புயலால் முறிந்த மரங்களை அகற்றும் பணி சவாலாக உள்ளது. புஷ்பவனம் ஊராட்சியில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து 25 நவீன மரம் அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு, முதற்கட்டமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபட தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வரவேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 209 அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச் சுவர்களை சீரமைக்க சி.பி.சி.எல். நிறுவனத்திடம் ரூ.1.75 கோடி நன்கொடை பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத் துறை செயற்பொறியாளர் செல்லக்கண்ணு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர்
இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.