நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் சார்பில் நாகையில் பிப். 18-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவகம், மகளிர் திட்டம், இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் யுடிஎல் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் பிப். 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு நடைபெறவுள்ளன.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் முகாமில் பங்கேற்கலாம். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், மேனிலை தேர்ச்சி பெற்றவர்கள், கலை, அறிவியல், வணிகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் பட்டயப் படிப்பு நிறைவு செய்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் வேலைவாய்ப்புப் பெறுவோரின், வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. முகாமில் பங்கேற்பவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, சுயக்குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வர வேண்டும்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித் தகுதி குறித்த விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.