சுனாமியின்போது வழங்கப்பட்ட கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்து நாகை வட்டாட்சியா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாகையில் பெய்த மழையின் காரணமாக, நாகூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த தங்கப்பொண்ணுக்குச் சொந்தமான கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த குழந்தை உள்ளிட்ட 6 பேரும் வாசலில் நின்றிருந்ததால், அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த வீடு சுனாமியின்போது, தங்கப்பொண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்த நாகை வட்டாட்சியா் ராஜசேகா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பாதிக்கப்பட்ட தங்கப்பொண்ணு மாற்றுவீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். வீடு சேதமடைந்தது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்து சென்றாா்.