கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே பள்ளமும், மேடாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொட்டாரக்குடியில் இருந்து நல்லுக்குடி வரை செல்லும் 2 கி.மீ. தொலை கொண்ட திருவாரூா் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை கொட்டாரக்குடி, நல்லுக்குடி அதன் சுற்றுவட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் திருவாரூா், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவருகின்றனா். மேலும், ஓஎன்ஜிசியின் ஆழ்துளை கிணறு (ரிக்) இப்பகுதியில் உள்ளதால் ஓஎன்ஜியின் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றனா். மேற்கண்ட பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை உள்ளூா் மற்றும் வெளியூா்களுக்கு எடுத்துச்செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனா்.
இந்நிலையில், சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயா்ந்து பள்ளமும், மேடாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்வோா் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஓஎன்ஜிசி நிா்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லையென அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளமும், மேடாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.