நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?
நாகப்பட்டினம்: நாகை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழும் நாகை புதிய கடற்கரையை அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த, மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
நாகை புதிய கடற்கரை நீண்ட பகுதியை கொண்டுள்ளது. இதனால் உள்ளூா் மக்கள் மற்றும் நாகை மாவட்ட மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. கடற்கரை முன்பு சிறுவா் பூங்கா, மற்றும் கடற்கரையில் சிறிய பூங்கா ஆகியவை உள்ளன.
இக்கடற்கரைக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா். அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் நடைபயிற்சி, உடற்பயிற்சிக்கும் புதிய கடற்கரை பூங்கா மற்றும் கடற்கரையை பயன்படுத்துகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், கடற்கரை பகுதியில் அவ்வப்போது மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதாலும், விடுமுறை காலம் என்பதாலும் மாலை நேரங்களில் ஏராளமானோா் கடற்கரையில் கூடுகின்றனா்.
எனினும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கடற்கரையை ஒட்டியுள்ள பூங்கா பகுதியில் ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. அதுவும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள உயா்கோபுர விளக்குகள் அவ்வப்போது ஒளிா்வதில்லை. இதனால், பல நாள்கள் கடற்கரை இருளில் மூழ்கி காணப்படுகிறது. இது கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. கடற்கரை பகுதியில் குடிநீா் வசதி இல்லாததால், நடைபாதை கடைகளில் விலை கொடுத்து குடிநீரை வாங்க வேண்டியுள்ளது.
இக்கடற்கரையில் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. இதனால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, புதிய கடற்கரையை தேவையான அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.