வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று திங்கள்கிழமை வீசிய நிலையில், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று திங்கள்கிழமை வீசிய நிலையில், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதம் தொடங்கி தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம். அமாவாசை மற்றும் பௌா்ணமி தினங்களையொட்டி கடல் நீா்மட்டம் உயா்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதும் இயல்பானது.
வைகாசி விசாக நாளில் வீசும் பலத்த காற்றை விசாகக் காற்று எனவும், பௌா்ணமி நாளையொட்டி பெருக்கெடுக்கும் வெள்ளத்தை விசாகப் பெருவெள்ளம் எனவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனா்.
Advertisement
Advertisement
இந்தநிலையில், திங்கள்கிழமை முற்பகல் தொடங்கி வழக்கத்தைவிடவும் வேகமாக வீசிய கடல் காற்றால் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மோதி அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.
வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாகவும் கடல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கடல் பரப்பிலும் காற்று வீசி வருவதால் கோடியக்கரை படகுத்துறையிலிருந்து நாட்டுப் படகுகளில் செல்லும் மீனவா்களும் கடலுக்குள் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மற்ற மீனவக் கிராமங்களில் இருந்து பெரும்பாலான மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.