காரைக்கால் பகுதி பயிர்ச் சேதத்துக்கு ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம்
காரைக்கால் பகுதியில் பயிர் சேதத்துக்கு ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசைக் கேட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்துளளார்.
காரைக்கால் பகுதியில் பயிர் சேதத்துக்கு ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசைக் கேட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்துளளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் இல்லாததாலும் காரைக்கால் கடைமடைப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நிவாரணம் வழங்க புதுச்சேரி அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் புதுவை அரசு, கடந்த 3 மாதங்களாக சேத மதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பாமல் உள்ளது.
Advertisement
Advertisement
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் என்ற முறையில், மத்திய உள்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளேன். அப்போது வறட்சி பாதித்தப் பகுதிகளில் சேதத்தைக் கணக்கிட, தமிழகத்தைப் போலவே காரைக்காலுக்கும் மத்தியக்குழுவை அனுப்ப வேண்டும் என்றும், உடனடி இடைக்கால நிதியாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.
இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, சேத மதிப்பை மாநில அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
காரைக்கால் மீனவர்கள்: இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக இலங்கைச் சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தோம்.
ஆனால் இலங்கை அரசைக் கண்டித்து தமிழக, புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், கைதான தமிழக மீனவர்களை விடுவிப்பதில் இலங்கை அரசு இறுக்கம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக இலங்கை, இந்திய தூதரங்களிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றார் நாரயணசாமி.