திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் ஆலய சித்திரைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்வாலயத்தின் சித்திரைத் திருவிழா ஆலய அர்ச்சகர் மு. பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாருக்கு காப்புக்கட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் டி.ராஜா, வழக்குரைஞர் கதா.க.பொற்செழியன், சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் வை.பக்கிரிசாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மே 6-இல் பிரதான நிகழ்வான தேரோட்டமும், மே 13-இல் தெப்பத் திருவிழாவும் நடைபெறும். மே 15-இல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தக்கார் எஸ்.சிவராம்குமார், செயல் அலுவலர் எம்.பாஸ்கரன், மேலாளர் சீனிவாசன் மற்றும் ஆலய ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.