காஷ்மீர் சிறுமி படுகொலை: திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் எச். பீர்முஹம்மது தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். ரஹ்மத்துல்லாஹ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தூய்மைப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் சிலர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். காலை 11.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது கடும் வெயில் நிலவியது. இதனால், பெண்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க, அட்டைப் பெட்டியை கிழித்து, வழங்கப்பட்டன. வெயிலுக்குத் தடுப்பாக பயன்படுத்திய இந்த அட்டைகளை, ஆர்ப்பாட்டம் முடிவுற்றவுடன், அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் குப்பைக் கூளமாக மாறியது. இதையடுத்து ஆர்ப்பாட்ட நிர்வாகிகள், அந்த இடத்திலிருந்த குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்திய பின்னரே அங்கிருந்து சென்றனர்.