பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
நாளை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் பலப்பரீட்சை...
பெங்களூரு : பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது சீசன், கொல்கத்தாவில் மாா்ச் 22 தொடங்கியது. அகமதாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) நடைபெறும் இதன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
Advertisement
Advertisement
பெங்களூரு மாநகரில் கடந்த ஆண்டில், ஜூன் 4-இல் நடைபெற்ற ஐபில்எல் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில்11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த விபரீதத்தை கருத்திற்கொண்டு, அதைப்போன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து, பெங்களூரு மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ஐபில் இறுதி ஆட்டம் முடிவுகள் வெளியான பின், பொது இடங்களில் பைக் பேரணிகள், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலைகளில் சாகசம் செய்தல், சாலைகளில் திரண்டு கொண்டாடுதல், பட்டாசுகள் வெடித்தல் போன்ற எந்தவொரு கொண்டாட்டத்துக்கும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.