பயணிகள் நிழலகம் மீது பேருந்து மோதியதில் 16 பேருக்கு காயம்
மன்னார்குடி அருகே புதன்கிழமை பயணிகள் நிழலகத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மன்னார்குடி அருகே புதன்கிழமை பயணிகள் நிழலகத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பட்டுக்கோட்டையிலிருந்து தனியார் பேருந்து கும்பகோணத்துக்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை பிரதான சாலை கீழநாகை என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசு நகரப் பேருந்தை முந்திசெல்ல முயன்றபோது, நிலைத் தடுமாறி சாலையோரம் இருந்த பயணிகள் நிழலகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் இருந்த பள்ளி மாணவியர் உள்ளிக்கோட்டை பிரியதர்சினி (13), மகாதேவப்பட்டணம் ராஜாத்தி(14), ஆலங்கோட்டை காவியா (14), கல்லூரி மாணவி வடசேரி துர்கா (18), மற்றும் பயணிகள் உள்ளிக்கோட்டை திவ்யா (22) கண்ணுக்குடி சுதா (25), ஆலத்தூர் திவ்யா (22) உள்ளிட்ட 16 பேருக்கு காயமேற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், திவ்யா மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.