கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!
மெக்சிகோவில் செயலிழந்த எரிமலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல் குறித்து...
மெக்சிகோவில் அமைந்துள்ள எஸ்டாடியோ அஸ்டெகா என்ற கால்பந்து திடலில் பீலே, மாரடோனா போன்ற உலகக் கோப்பை வென்ற ஜாம்பவான்கள் விளையாடியுள்ளார்கள். தற்போது, மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டி நடைபெற இருக்கிறது.
மெக்சிகோவில் இந்தத் திடலை விடவும் முக்கியமான பாரம்பரியமான மற்றுமொரு திடல் இருக்கிறது. அதுதான் ’கடவுள்களின் ஆடுகளம்’ - ’Field of the Gods’ என அழைக்கப்படுகிறது.
மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் திடலின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தத் திடல் செயலிழந்த எரிமைலையின் பள்ளத்தில் அமைந்திருப்பதுதான். அதனால்தான் இதற்கு ’கடவுள்களின் ஆடுகளம்’ எனப் பெயர் வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
Advertisement
Advertisement
தியாகோ என்ற எரிமலையின் உள்குகைக்குள் அமைந்துள்ள இந்தக் கால்பந்துத் திடலை சான்டா செசிலியா டெபெட்லாபா என்ற கிராமத்து மக்களே உருவாக்கியது. மிகவும் கரடுமுரடான இந்தக் கிராமத்தில் கால்பந்து திடல் இல்லாததால் எரிமலையின் உச்சிக்குச் சென்று, அங்கிருந்த பள்ளத்தைச் சரிசெய்து உருவாக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல குடும்பத்தினர் இந்தத் திடலுக்கு வந்து கால்பந்து விளையாடுவார்கள். இவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லாமல் ஏழை நடுத்தர குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகோ லீக்கில் 10 அணிகள் மோதும். இதில் ஒவ்வொரு அணியும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இதில் வயது வித்தியாசம் இல்லாததால் ஒரே அணியில் தாத்தா, தந்தை, மகன், பேரன் என அனைவரும் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பை அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கிறது. முதல்போட்டி மெக்சிகோவில் தென்னாப்பிரிக்க அணியும் மெக்சிகோவும் மோதுகின்றன. இந்த நிலையில், மெக்சிகோவின் புனிதமான கால்பந்து திடல் குறித்து அந்த ஊர் மக்கள் ஏபி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு இது வாழ்க்கை முறை. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கிருப்பது எங்களின் வழக்கங்களில் ஒன்று. இங்கு நடைபெறும் தொடர்களில் சிறப்பான சூழ்நிலை நிலவும்.
இங்கு சண்டை, கலகம் என எதுவும் இருக்காது. மக்கள் ஒற்றுமையுடன் இருக்கவே இங்கு வருகிறார்கள். அணியின் அடிநாதமே குடும்பம்தான். ஒருவர் வெளியேறினால் அவருடைய மகன் வருவார். பிறகு அவரது பேரன் வருவார் என ஒருவர் கூறினார்.
கால்பந்து எனது ஆர்வம். எனக்கு விளையாடத் தெரியாவிட்டாலும் அதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது கணவர் விளையாடுவதைப் பார்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காத்திருப்பேன் என ஒரு பெண் கூறினார்.
அரசின் உதவியில்லாமல் இயக்கும் இந்தத் திடலைப் பரமாரிக்க உள்ளூர் மக்களே பணத்தைச் செலவிடுகிறார்கள். ஏனெனில் அரசின் பணத்தைப் பயன்படுத்தினால் இது மக்களின் உரிமையாக இருக்காது எனவும் கிராமத்து மக்கள் கூறுகிறார்கள்.