ஒரு உலகக்கோப்பை வெற்றி உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்!
1990-ல் இத்தாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிபோட்டியில் மேற்கு ஜெர்மனி அணி கோப்பை வெல்ல உதவிய முன்னாள் கால்பந்து வீரர் ஜூர்கன் க்ளின்ஸ்மேன் பேசியவை.
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்பது விளையாட்டு வாழ்க்கையில் மிகச் சில கால்பந்து வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அரிய அனுபவம். உலகின் மிகப்பெரிய மேடையான இதில் வெற்றி வெற்றிபெறுவது அதைவிட அரிதான அனுபவம்.
ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் இடையே இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அந்த அணிகளின் வீரர்கள், உலகக்கோப்பையை வெல்லும் தங்கள் வாழ்நாள் கனவை நோக்கி நியூ ஜெர்ஸி மைதானத்தில் களமிறங்கவுள்ளனர்.
இத்தகைய உலகக்கோப்பையை வெல்வதன் அனுபவத்தைப் பற்றி, 1990-ல் இத்தாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிபோட்டியில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி மேற்கு ஜெர்மனி அணி கோப்பை வெல்ல உதவிய முன்னாள் கால்பந்து வீரர் ஜூர்கன் க்ளின்ஸ்மேன் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
அதில், “இறுதிப்போட்டியின் தனித்துவமே அதுதான். ஏனென்றால், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் இது தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியதாக இருக்கலாம் என்பதை உணர்ந்திருப்பார்கள். இதன் முக்கியத்துவம் மிகப்பெரியது.
ஒவ்வொரு அணியின் வீரர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது தங்கள் நாடு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என கனவு காண்கிறார்கள்" என்றார்.
மேலும், “நீங்கள் போட்டிகளுக்காக தயாராகியிருப்பீர்கள். முழுத் தொடரிலும் விளையாடியிருப்பீர்கள். முழுவதும் நேர்மறையான மனநிலையுடன் இருப்பீர்கள். ஏனென்றால். இறுதிப்போட்டிக்கு வரும் இரு அணிகளும் அதற்கான தகுதியுடனே வருகின்றன.
உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருப்பது என்பது உங்கள் அணிக்கான வெற்றியை உறுதி செய்வது பற்றியது. எனவே பதற்றத்தைக் கையாளுவதிலும், சமநிலையோடும் அமைதியோடும் இருப்பதிலும் கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பதும் முக்கியம். ஆனால், அவற்றைச் சொல்ல எளிமையாக இருக்கும். செயல்படுத்துவது சற்றே கடினம்.
முடிந்தவரை, உங்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் அணிக்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமையில் முழு உறுதியுடன் இருக்க வேண்டும். அதேநேரத்தில், நிதானமாகவும் சமநிலையோடும் இருக்க வேண்டும். பொதுவாக ஒருவரின் திறமையான ஆட்டமே வெற்றியைத் தீர்மானிக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவது உண்மையில் எப்படிப்பட்ட உணர்வைத் தரும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”விளையாடும்போது அதை நாம் உணர்வதில்லை. அது முடிந்ததும் கொண்டாட்டத்திற்கான நேரம் வரும். இரவும் பகலும் கொண்டாட்டங்கள் நீடிக்கும்.
விளையாட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறிய பிறகுதான் அதன் உண்மையான பரிமாணம் புரிய வரும். அதிலிருந்து ஓய்வுபெற்று வேறு பணிகளில் நீங்கள் ஈடுபடும்போது, இறுதிப்போட்டியை நேரில் பார்த்தவர்கள் உங்களை எப்போதும் நினைவுகூர்வார்கள்.
உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள்கூட, அந்நேரம் எங்கே இருந்தார்கள், என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை உங்களுக்கு நினைவுகூர்ந்து சொல்வார்கள். அந்த வெற்றி எப்போதும் உங்களுடன் நிலைத்திருக்கும். உலகக் கோப்பையை வெல்வதில் உள்ள அற்புதமான விஷயம் இதுதான். அது உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்”
மூன்று முறை உலகக் கோப்பையில் பங்கேற்றவரும் (மேலும் இருமுறை பயிற்சியாளராகப் பங்கேற்றவரும்) ஆன அவர், அந்தத் தருணத்தின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தி விளையாடுவது மிக முக்கியம் என்று கூறுகிறார்.
Remarks by former footballer Jürgen Klinsmann, who helped the West German team win the World Cup final held in Italy in 1990.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.