கிஸான் சம்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி
திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான நிதியுதவி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான நிதியுதவி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
மத்திய அரசு அறிவித்துள்ள, பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று தவணையாக வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் இதற்கான விழா வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் கே. மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர், விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் பிரசன்னா, துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் இத்திட்டம் குறித்து பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் மகரஜோதி நன்றி கூறினார்.