முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

Updated On : 31 மே 2026, 1:29 pm IST
பகிர்:

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'. 19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிதிவண்டிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுகின்றன.

'சாதி, மதம், இனம், வயது, பாலினம் உள்ளிட்ட எவற்றையும் பொருள்படுத்தாமல் அனைத்து மக்களாலும் பயன்படுத்திக் கொள்ளும் உலகளாவிய சாதனம்தான் மிதிவண்டிகள்' எனலாம். டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சைக்கிளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகள் அஞ்சல் துறையின் தபால் விநியோக வாகனமாக மிதிவண்டிகளே இப்போதும் பயன்படுத்தி வருகின்றன. பல நாடுகளில் மிதிவண்டிகளை எப்படிப் பொறுப்புடன் ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து விதிமுறைகள் குறித்து சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் மிதிவண்டி பயன்பாடு கணிசமாகக் குறைந்து, இரு சக்கர மோட்டார் வாகனப் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சாலைகளில் மிதிவண்டிகளில் செல்வோரையும் காண்பதே அரிது. மிதிவண்டிகள் இயக்குவதற்கான பாதைகள் சரிவர இல்லை. இளைஞர்களுக்கும் விலை உயர்ந்த இரு சக்கர மோட்டார் வாகனங்கள் மீதான ஆர்வமே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வீட்டுக்கொரு மிதிவண்டிகள் என்று இருந்த நிலையில், தற்போது இரு சக்கர மோட்டார் வாகனங்களே அதிகரித்துக் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வாடகை மிதிவண்டிக் கடைகள் அதிகளவில் ஒவ்வொரு ஊரிலும் இருந்தன. மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்து ஒரு பகுதியில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு தனியாகவோ, கூட்டோகவோ சென்று வந்தனர். மிதிவண்டிகளை ஓட்ட கற்போரும் பல அளவுகளில் வாங்கி ஓட்டப் பழகுவர். தற்போது அதுபோன்ற வாடகை மிதிவண்டிக் கடைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. அவற்றின் பழுதுபார்ப்புக் கடைகளும் பன்மடங்கு குறைந்துவிட்டன.

உடற்பயிற்சிக்கும் உகந்தது

முப்பது ஆண்டுகளுக்கு முன்அதிகரித்திருந்த மதிவண்டிகளின் பயன்

பாட்டால், பல்வேறு நன்மைகள் இருந்தன. அதிவேகம் இல்லாததால் விபத்துகள் குறைந்த அளவிலேயே நிகழ்ந்தன. போக்குவரத்து நெரிசலும் குறைந்து காணப்பட்டது. மனித ஆற்றலைப் பயன்படுத்தி இயக்கும் முறை என்பதால், போதிய உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் இருந்தது.

இதனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரமாக மிதிவண்டிகள் விளங்கின. தற்போது மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தி உடலுழைப்பு குறைந்ததால் உடல் பருமன் அதிகரித்து, அதைக் குறைக்க உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்று அங்குள்ள மிதிவண்டிக் கருவிகளில் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்கின்றனர்.

மோட்டார் வாகனப் பயன்பாட்டால் பெட்ரோல் போன்ற எரிபொருள் செலவுகளுக்காக தனிமனித குடும்பப் பொருளாதாரத்தில் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

தற்போது நிகழும் ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் மோட்டார் வாகனப் பயன்பாட்டை அத்தியா

வசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, பிற பணிகளுக்கு சைக்கிள் பயன்பாட்டையே பயன்படுத்துவது தற்போதைய சிக்கலுக்குத் தீர்வாக அமையும்.

புவிவெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களுக்கு மோட்டார் வாகனங்கள் வெளியிடும் அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றம் முக்கியமானதாக உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடு, காற்று மாசு, சுவாச கோளாறுகள் போன்ற மனித சமுதாயத்துக்கு பல்வேறு பிரச்னைகளைக் குறைக்க சைக்கிள் பயன்பாட்டை அதிகரிப்பது சிறந்த வழியாக அமையும்.

ஜூன் 3-இல் உலக மிதிவண்டி தினம்

அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் லெசுக்செக் சிபிலிசுக்கி தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக சைக்கிள் தினத்தை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். இந்த முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உள்பட 56 நாடுகள் ஆதரவளித்தன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் மிதிவண்டியின் தனித்துவம், நீண்ட ஆயுள், அதன் பல்துறை பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்காகவும், மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியமான உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 3-இல் உலக மிதிவண்டி தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் 2018-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் மிதிவண்டிகள் பேரணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சாலைப் பாதுகாப்பு, ரத்த தானம் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பேரணிகளும் மிதிவண்டி பேரணிகளாக அமைத்துக் கொண்டால், கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும், பெட்ரோலிய பயன்பாட்டைக் குறைக்கவும் ஏதுவாக அமையும்.உலக பூமி தினம், சுற்றுச்சூழல் தினம் போன்ற பல்வேறு சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சிகளின்போது மிதிவண்டிகளின் பயன்பாட்டை அதிக அளவில் பயன்படுத்துவது இன்றைய சூழலுக்கு அவசியமானது.

- என். எஸ். சுகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.