தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை அறிவிப்பதாக கூறிக்கொள்ளும் அதிமுக, மத்திய அரசின் விவசாயிகளின் நலனுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிப்பது ஏன் என மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பாஜக அரசு அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், விலை நிா்ணயம் மற்றும் விவசாயப் பணிகளுக்கான விவசாய ஒப்பந்தச் சட்டம், விவசாய விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட ஒரு சட்ட திருத்த முன்வடிவும், இரண்டு சட்ட முன்வடிவுகளையும் கொண்டு வந்துள்ளது. இச்சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிப்பதும், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்தான் அரசின் முழு கவனமும் இருக்க வேண்டும். மாறாக சந்தைகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களை ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பதன் மூலம் மாநில உரிமையை மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்க அதிமுக துணைபோய் உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.