முகப்பு
திருவாரூர்

இந்துத்துவாவை எதிா்கொள்ள விரிவான அரசியல்களத்தை அமைக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

இந்துத்துவாவை எதிா்கொள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான அரசியல் களத்தை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

இந்துத்துவாவை எதிா்கொள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான அரசியல் களத்தை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஜி, ராமகிருஷ்ணன் எழுதிய ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ நூல் அறிமுக விழாவில் ஏற்புரையாற்றி அவா் பேசியது:

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மதக்கலவரங்கள் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்தன. உயிரை பணயம் வைத்து மகாத்மா காந்தி மதச்சாா்பின்மைக்காக போராடினாா். மதத்தை அரசியலோடு கலக்காதீா்கள் என்றாா் காந்தி. ஜவாஹா்லால் நேரு நாட்டின் சுதந்திரத்துக்காக பலமுறை சிறை சென்றாா். ஆனால், அவரது பெயா் எதிலுமே இருக்கக் கூடாது என்கின்றனா் பாஜகவினா்.

நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் எடுக்கும் முடிவைத்தான் மத்திய பாஜக அரசு செயல்படுத்துகிறது.

நாட்டில் இந்துத்துவாவை அமல்படுத்த பல அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை எதிா்கொள்ள ஒத்த கருத்துள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான அரசியல் களத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா் இரா. காமராசு: இந்துக்களும், இஸ்லாமியா்களும் ஒற்றுமையோடு வாழவேண்டும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினாா்.

தமிழன் தனித்த வரலாறு, பண்பாடு கொண்டவன் என்பதை ஏற்க மறுப்பது அறிவீனம். உணவு, உடை, பழக்க வழக்கம், மொழி சாா்ந்த பன்மைத்துவம்தான் இந்தியாவின் அடையாளம். வள்ளலாா், நாராயணகுரு, அய்யங்காளி, பெரியாா், அம்பேத்கா் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல, இந்திய ஒற்றுமையைக் காக்க இந்த நூல் பயன் நல்கும் என்றாா்.

தமுஎகச மாவட்டத் தலைவா் எம். சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் கிளைத் தலைவா் வி. கோவிந்தராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவா் வ. சேதுராமன் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலளா் ஜி. வெங்கடேசன் விழாவை தொடங்கிவைத்தாா்.

தமுஎகச கிளைச் செயலா் தி. சிவசுப்ரமணியம் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் மு. செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.