தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆழ்துளைக் கிணற்றில் இறங்கிய தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: பிகார் மாநிலம், காக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெளதம் சஹ்னி (20). உத்தரப் பிரதேச மாநிலம், லஹிம்பூர் கேரியை சேர்ந்தவர் அஜய்பால் (18). இவர்கள் தனியார் சுத்திரிகரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நொய்டா பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இறங்கி வேலை செய்யுமாறு இருவரையும் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
இதன்படி, அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆழ்துளைக் கிணற்றில் இறங்கியுள்ளனர். அப்போது, மூச்சுத் திணறி அதனுள் சிக்கினர். இதைத் தொடர்ந்து, அவர்களை மீட்க போலீஸார், தீயணைப்புத் துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆழ்துளைக் கிணற்றினுள் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இருவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.